Wednesday 6 June, 2012


இஸ்லாமிய போர் நெறிமுறை!
( (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
மற்ற மத அரசர்கள் போலல்லாது இஸ்லாமியர் போர்களில் தர்மம் காத்து, நெறி தவறாது நடந்து கொண்டனர் என்று பெருமானார்(ஸல்) அவர்களும், அவர்களுக்குப் பின்னால் பதவியேற்ற கலிபாக்களும், அலி(ரழி) மற்றும் காலித்(ரழி) போன்ற தளபதிகளும், அதன் பின்பு சிலுவை யுத்தத்தில் இஸ்லாமிய கொடியினை ஜெருசலத்தில் நிலை நாட்டிய வீரத் தளபதி சலாதீன் போன்றோர் போர்களில் மாற்று மதத்தினர் கவுரவம் பாதிக்காது நடந்து கொண்டார்கள் என்றும், இஸ்லாமியர் தங்கள் மார்க்கத்தினை வாள் கொண்டு பரப்பவில்லை, மாறாக மற்ற மதம், இனத்தினவரை அன்பு, பாசத்தால் அரவணைத்து பாதுகாக்கும் போர் வீரர்களாக இருந்து மார்க்கம் பரவ ஊன்று கோலாக இருந்துள்ளனர்  என்பதினை வரலாற்று ஆசிர்யர்கள் பொன் எழுத்துக்களால் பொறித்துள்ளனர்.
ரசூலல்லாஹ்(ஸல்) அவர்கள் போரிட நேர்ந்த போதோ அல்லது தளபதிகளுக்கு வேற்று நாடுகளுக்குபோருக்காக கட்டளைகள் பிறப்பித்து அனுப்பும்போதோ, 'லக்ஷ்மன் கோடு' என்ற கடுமையான கட்டுப்பாடு மிகுந்த உத்தரவுகளை பிறப்பித்தார்கள். உதாரணத்திற்கு, பயிர்களை, உணவினைதரும் கனி வர்க்க மரங்களை, நீர் நிலைகளை, குடியிருக்கும் வீடுகளை சேதப் படுத்தாதும், முதியோர்,நோயாளிகள், பெண்கள், குழந்தைகளை, புறமுதுகிட்டு ஒடுவோர்களையும், வளர்ப்பு பிராணிகளையும் கொன்று குவிக்கவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது என்று கட்டளை இட்டார்கள். போருக்குச் செல்லும் தளபதிகள் முதலில் மார்க்க அழைப்பினை விடுப்பர். அதை ஏற்காது எதிர்த்து நின்ற இறை மறுப்பாலர்களைத் தான் இஸ்லாமிய படைகள் போரிட்டனர். ஆனால் இஸ்லாமிய படைகளின் வலிமை, மார்க்கத்தின் அருமை, பெருமை தெரிந்த இறை மறுப்பாலர்களுடன்,சமாதான உடன்படிக்கைகள் மேற் கொண்டர் என்பதிற்கு எடுத்துக்காட்டு தான், வரலாற்று சிறப்பு மிக்க 'ஹுதைபியா' உடன் படிக்கையாகும்.
போரில் கைப்பற்றப் பட்ட செல்வங்களை போர் வீரர்களோ,தளபதிகளோ, கலீபாக்களோ அபகரித்துக் கொள்ளாது  அத்தனை செல்வங்களும் அரசுடமை ஆக்கப் பட்டு, அனைத்து மக்களுக்கும் பகிர்ந்து வழங்கி சமவுடமை தத்துவத்திற்கு சிறந்த உதாரணமாக விளங்கியது இஸ்லாமியப் போர்கள். இஸ்லாமிய மார்க்கத்தினர் எதிரிகளுடன் நேருக்கு நேர் தங்கள் மார்க்கத்தின் கொடியினை தூக்கி நிறுத்த புனிதப் போரிடும் போது உயிரிழந்தவர்களுக்கு  ஷஹீதானவர்கள் பட்டியலில் அல்லாஹுத்தாலா ஜென்னத்துல் பிர்தௌசில் நுழையச் செய்வான். ஆனால் ஏக இறைவன் கொடுத்த மனித உயிரினை, கோழைத் தனமாக எதிரிகளை தாக்குகிறோம் என்று சொல்லி, தற்கொலைப் படை அமைத்து, வெடிகுண்டு கலாச்சாரத்தில் தாக்குவதின் மூலம் எதிரிகள் மட்டும் அல்லாது மூமினான அப்பாவி சகோதர, சகோதரிகள், வயதானவர்கள், குழந்தைகள் மடிந்தும், காயம்பட்டும், கை, கால்கள், கண்கள் இழந்தும் கஷ்டப் பதுவதினை இஸ்லாமிய மார்க்கம் ஒருபோதும் அனுமதிக்க வில்லை.
ரசூலல்லாஹ்(ஸல்) அவர்கள் போதித்த போர் நெறிகளை மேலை நாடுகள் கடைப் பிடித்து இருப்பார்களேயானால் இரண்டாம் உலகப் போரில், ஜப்பான் நாட்டின் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி போன்றவற்றில் மனித இனம் கொல்லி அணுகுண்டினை வீசி, அந்த நகரங்களை கூண்டோடு அழித்து இருக்க மாட்டார்கள், அது மட்டுமல்ல,தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் ஆப்கானிஷ்தான், ஈராக்,லிபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஆளில்லா விமானங்களை அனுப்பி பல்வேறு இடங்களில் வாழும் அப்பாவி மக்களை அழித்திருக்க மாட்டார்கள்,அத்துடன் மற்ற அரசுகளின் உள்  விவகாரங்களில் தலை இடவோ அல்லது அந்த நாடுகளின் இறையான்மையினை நசுக்கவோ முயன்றிருக்க மாட்டார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அதுபோன்ற செயல்களில் ஈடு பட்டதால் அந்த நாடுகளின் தலைவர்கள் பதவி இழந்தும், பொருளாதார வீழ்ச்சியும் கண்டார்கள் என்பது இன்றைய உலகில் நடந்த உண்மை நிகழ்வு ஆகும்.
ஆகவே இஸ்லாமிய போர் நெறிமுறைகளை ஐக்கிய நாடுகளின் சபை ஏற்று அவைகளை மேலை நாடுகளும், மற்ற நாடுகளும் கடைப் பிடிக்கச் சொல்வதின் மூலம் சர்வதேச சமூதாயத்தின் அமைதியினை நிலை நாட்ட முடியுமல்லவா?

Friday 1 June, 2012


கரண்டிலில்லை, கட்டிலில்லை, கல்வியில் முதன்மை இடம்!
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,,பீ.எஸ்(ஓ)

சென்ற வருடம் சென்னையில் வசிக்கும்  வியாபாரி நண்பர் ஒருவர் தன் மகனுடன் வந்து, தன் மகன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிப்பதாகவும், அவனுக்குப் படிப்படிற்காக, தனி அறை, இன்டர்நெட், ஏ.சி.  வசதியெல்லாம் செய்து கொடுத்திருப்பதாகவும், ஆனால் அவன் சரியாக படிக்க மாட்டேன் என்கிறான், அவன் பரிட்சையில் குறைந்த மார்க்கே வாங்கியுள்ளான் என்றார். அந்த மாணவனிடம் காரணம் கேட்டதிற்கு, 'நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கூடத்தில் பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். ஆகவே தன்னை அங்கு படிக்க வைக்கச் சொல்லுங்கள்' என்றான். தந்தையோ தன் குடும்ப சூழலில் தன் மகன் தன் வீட்டில் தங்கி படிப்பது தான் நல்லது என்றார். அந்தப் பையனுக்கு தந்தையின் சூழ் நிலையினையும், கவனம் திரும்பாது படித்தால் நிச்சயமாக அவனும் பிளஸ் டூ பரிச்சையில் அதிக மதிப்பெண் பெறலாம் என்று அவனுக்கும், அவனுடைய தந்தைக்கு மகன் படிக்கும்போது எந்த இடைஞ்சலும் வராதுப் பார்த்துக் கொள்ளும்படியும் புத்திமதி சொல்லி அனுப்பினேன். எல்ல வசதியும் வாய்ப்பும் இருந்து சிலர் சரியாக படிப்பில் கவனம் செலுத்த மாட்டேன் என்கிறார்கள். ஆனால் குறைந்த வசதியே கொண்டு ஒரு மாணவன் சி.பி.எஸ்.சி. என்ற படிப்பில் பிளஸ் டூ பரிச்சையில் இந்த வருடம்(2012) இந்தியாவிலேயே முதல் மாணவனாக தேர்வாகி உள்ளான் என்று படிக்கும்போது நெஞ்ஜெம்மெல்லாம் இனிக்கின்றது அல்லவா? அதுவும் ஒரு வசதி குறைவான குடும்பத்தில் வாழ்ந்த ஒரு முஸ்லிம் மாணவன் எப்படி அடைந்தான் என்று பார்க்கலாம்!
            மணிபூர் மாநிலத்தில் லிலாங் என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளிக்கூடம் மற்றும் தொழுகை பள்ளி மௌலானா பசீர் ரஹ்மானின் ஆறு பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்த கடைக்குட்டி முஹம்மத் இஸ்மத். அவனுக்கு பதினெட்டு மாதம் இருக்கும்போது தாய் இறைவனடி சேர்ந்தார். அவனையும், சவைளையுமான ஆறு பெண் குழந்தைகளை மௌலானா பஷீர் வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி வளர்த்தார். ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்ததால் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருந்தது. அந்த கிராமத்தில் சரியான ரோடு வசதி இல்லை, மின்சார வசதி இல்லை. ஆனால் அவருடைய ஆர்வத்தால் மூத்த ஆறு பெண் குழந்தைகளையும் பட்டதாரியாக்கினார். பொருளாரதார வசதி இல்லாவிட்டாலும் கடைக் குட்டி முஹம்மத் இஸ்மத், தந்தை மற்றும் படித்த  சகோதரிகளின் ஆதரவினால் மனந்தளராது மெழுகு வர்த்தி வைத்து தன் படிப்பினை ஆர்வத்துடன் தொடங்கினான். இன்று இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களை விட அதிகமான மதிப் பெண்ணான 495/500 முதல் இடத்தினை பிடித்துள்ளான். இஸ்மத் கணிதம்,பௌதீகம், பைன் ஆர்ட்ஸ் மற்றும் ஹோம் சயின்ஸ் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும்,ஆங்கிலத்தில் 98, மதிப்பெண்களும், அறிவியலில் 97 மதிப் பெண்களும் பெற்றுள்ளான். அது மட்டுமல்ல, தன் வருங்கால குறிக்கோளே ஐ.ஏ.எஸ் ஆவதுதான் என்று இப்போதே தீர்மானித்து விட்டதாக பேட்டியில் சொல்லியுள்ளான். அபார தன்னம்பிக்கை கொண்ட அந்த சிறுவனின் படத்தினை உங்களுக்கு கீழே தருவதோடு, நாம் படித்துக் கொள்ளும் பாடமும் என்ன என்று பார்க்கலாம்:
1)      படிக்க வேண்டுமென்றால் பத்மா சேசாத்ரி ஆங்கிலப் பள்ளிக்கோ அல்லது டான் போஸ்கோ பள்ளிக்கோ அல்லது டி.ஏ.வீ. பள்ளிக்கோ படை எடுத்து ஐம்பது ஆயிரத்திலிருந்து ஒரு லக்ஷம் வரை டொனேசன் கொடுத்துப் பிள்ளைகளை சேர்க்க வேண்டாம்.  மாறாக  வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்து பிள்ளைகள் கவனம் வீடியோ கேம், இன்டர்நெட் சாட்டிங், சினிமா போன்ற கேளிக்கைகளில் சிந்தாது பார்த்து படிக்க வைத்தால் போதுமானது.
2)      குடும்பத்தில் பெற்றோரில் ஒருவர் கண்டிப்பாக படித்து இருக்க வேண்டும். அப்போது தான் குழந்தை வளர்ப்பும் சிறப்பாக இருக்கும். இஸ்மத்தின் தந்தை படித்திருந்ததால், தந்தையாக மட்டுமில்லாமல் ஏழு பிள்ளைகளுக்கும் தாயாக இருந்து படிக்க வைத்துள்ளார். அது மட்டுமல்ல, நமதூரில் இமாம்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு குலத் தொழிலாக இமாம்களாக ஆக்கவே கருதுகிறார்கள். அப்படி இல்லாமல் மார்க்க அறிவோடு, உலகக் கல்வியும் இல்லை என்றால் சமூதாய பிள்ளைகள் பிற்பட்டவர்களாக ஆகிவிடுவோம் என்ற கவலை மற்ற இமாம்களுக்கு வரவேண்டும்.
3)      நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என்பார்கள். மூத்த ஆறு சகோதரிகளும் படித்து பட்டதாரியானதால், இளைய தம்பி இஸ்மாத்தினையும் சிறக்க படிக்க வைத்துள்ளார்கள் சகோதரிகள். ஆகவே தாய் இல்லாவிட்டாலும் மற்ற பெண்களும் கட்டாயம் பட்டதாரிகள் என்ற பெருமையினை சேர்க்க பெண்கள் முன் வர வேண்டும். ஏனென்றால் வீட்டில் ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பமே கல்விக் கண் என்ற கதவினை  திறக்கும் சாவியாகும்.
நமது முஸ்லிம் சமூதாயம் பின் தங்கி இருப்பதின் முதல் காரணமே ஒழுங்கான கல்வி பிள்ளைகளுக்கு கிடைக்க வில்லை என்பது தான். அது மட்டுமல்ல. பெற்றோர்கள் தங்கள் குலத் தொழிலையே பிள்ளைகளை பின் பற்றுமாறு செய்கிறார்கள். உதாரணத்திற்கு மீன் வியாபாரியோ, கோழி வியாபாரியோ, கருவாட்டு வியாபாரியோ, இரும்பு வியாபாரியோ,பாய் வியாபாரியோ தங்கள் குழந்கைகளை தங்கள் தொழிலிலேயே ஈடு படுத்துகிறார்கள். ஆனால் சிறந்த பொன் விளையும் பூமி என்ற தஞ்சாவூர் கோவை, ஈரோடு, சேலம்  மக்கள் கூட தங்கள் குழந்தைகளை விவசாயத்தில் வானம் பார்க்கும் வேலையாக இருக்கிறது என்று கல்வியில் ஈடுபடுத்துகிறார்கள். ஆகவே சமுதாய மக்களும் கல்வி கற்பது இன்றும் என்றும் நல்லது என்று கருதி குழந்தைகளை கல்வி கற்க வைக்க வேண்டும்.