Monday 14 March, 2016

முஸ்லிம்கள் வேலை வாய்ப்பில்லாமைக்கு யார் காரணம்!



(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச் டி.ஐ.பீ.எஸ்(ஓ)
இந்தியாவில் முஸ்லிம்கள் வேலை வாய்ப்பு எந்த நிலையில் உள்ளது என்று தெரிந்து கொள்ள உங்களுக்கெல்லாம் ஆவலாக இருக்கும். ஆகவே உங்களுடன் சமூதாய முன்னேற்றத்திற்காக சில புள்ளி விவரங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகின்றேன்.

'உம்மி நபி எம்பெருமானார் ரசூலல்லாஹ்(ஸல் ) அவர்களுக்கு, முதல் முதல் வாசகம் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் அருளப் பெற்றது, 'ஓதுக' என்ற வசனம். அந்த வசனம் கல்வி, கேள்வியின் முக்கியத்துவத்தினை  ஆகிலத்திற்கு  எடுத்துக் காட்டும் முன்னுதாரணம்.

அந்த கல்வி, கேள்வி உலக அறிவியல், விஞ்ஞானம், கணிதம் பெருக காரணமாக அமைந்தது என்பதினை மேலை நாட்டு அறிஞர்களும் மறுக்க வில்லை.
இந்தியாவினைப் பொருத்தமட்டில் கல்வி காலனி ஆதிக்கத்துக்கு முன்பு, பின்பு என்று பிரிக்கலாம். காலனி ஆட்சிக்கு முன்பு முகலாய சாம்ராஜ்யம் இருந்தது உங்களுக்குத் தெரியும்.
முகலாய ஆட்சி காலத்தில் மத சார்பில்லாத உயர்  கல்வி நிலையங்களாக,
1) மேற்கு வங்கத்தில், 'அலியா யுனிவர்சிட்டி'
2) ஹைதராபாத், 'ஜாமியா நிஜாமா'
3) பிஜாப்பூரில், 'ஜாமியா ஹாசிமியா'
ஆகியவைகள் இருந்து கல்விப் பணி செய்து வந்தது.

காலனி ஆட்சி காலத்தில் மத சார்பில்லாத உயர் கல்வி நிலையங்களாக:

1) யுனிவெர்சிட்டி ஆப் முனாவருள் இஸ்லாம்.
2) அலிகார் முஸ்லிம் யுனிவெர்சிட்டி
3) ஜமியா மிலியா இஸ்லாமியா
4) ஜாமியா உஸ்மானியா
ஆகியவை கலை மற்றும் விஞ்ஞான கல்விப் பணி ஆற்றி வந்தது.
ஆரம்பத்தில் உயர் கல்வி உயர் கல்வி நிலையங்களை முஸ்லிம்கள் நடத்தி வந்தாலும் சுதந்திர இந்தியாவில் வேலை பார்க்கும் முஸ்லிம்கள் நிலை பரிதாபமாக இருக்கின்றது என்பதினை  இந்திய பாராளுமன்றத்தில் 26.2.2016 அன்று மைனாரிட்டி வெல்பார் மந்திரி அப்பாஸ் நக்வி பட்டியலிட்டுக் காட்டியதினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகின்றேன்.
இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களிடையே வேளையில் இருக்கும் இந்துக்கள் 41 சதவீதமாகும், முஸ்லிம்களைவிட குறைந்த மக்களைக் கொண்ட கிருத்துவர்கள் 41.9 ச34தவீதமும், புத்தர்கள் 43.1 சதவீதமும், சீக்கியர்கள் 36.3 சதவீதமும், ஜைன மதத்தினர் 35.5 சதவீதமும், மைனாரிட்டி சமூகத்தினரிடையே அதிகமான மக்கள் தொகையினைக் கொண்ட முஸ்லிம்கள் 32.6 சதவீதமாகவும் உள்ளனர்.
தனியார் வேலை நிறுவனம் அவர்கள் விருப்பப் படி வேலையாட்களை நியமனம் செய்து கொள்ளலாம். ஆனால் அரசு நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கென்று 27 சதவீத பிற்பட்டோர் பட்டியலில் இடம் கொடுக்க அரசியல் சட்டத்தில் வழி வகை செய்துள்ளது. அதன் படி முஸ்லிம்கள் அரசு வேளையில் 23.7 சதவீதமும், தனியார் நிறுவனங்களில் 6.5 சதவீதமும், ஹிந்துக்கள் 34.2 சதவீத அரசு வேலைகளிலும், 13.1 சதவீதம் உள்ளனர்.

மைனாரிட்டிகளாக இருந்தாலும் கிருத்துவர்களும், புத்தர்களும், ஜைன மதத்தினரும், சீக்கியரும் அதிக வேலைவாய்ப்பினை கொண்டிருக்கின்றார்கள் என்றால், அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் அதிகம். அது மட்டுமல்லாமல் அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கின்றார்கள், அது மட்டுமல்லாமல் அவர்கள் அரசு வேலைகளை அவர்கள் சமூகத்தாருக்கு பயிற்சி மையங்கள் நடத்தி எடுத்துச் சொல்கிறார்கள். அவர்கள் சமுதாயங்களில் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள் .
மத்திய அரசால் முஸ்லிம்கள் கல்வி,அரசு வேளைகளில் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார்களா என்று ஆராய அமைக்கப் பட்ட உச்சமன்ற முன்னாள் நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமயிலான குழு தன்  அறிக்கையில்:

முஸ்லிம்கள் 3 சதவீதம் ஐ.ஏ எஸ் பதவியிலும், 1.8 சதவீதம் இந்திய பாரின் சர்வீஸில் 1.8 சதவீதமும்(வெளி விவகார அமைச்சகரம்), இந்திய காவல் பணியில் 4 சதவீதமும், மத்திய காவல் படையில் 6 சதவீதமும், சுகாதாரப் பணியில் 4.4 சதவீதமும், போக்குவரத்தில் 6.5 சதவீதமும் தான் என்ற பரிதாபகரமான நிலையினைச் சொல்கிறது.
இதற்கு காரணம் என்ன என்று சொல்லும்போது முஸ்லிம் பெண்கள் 70 சதவீதம் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கின்றார்கள், ஹிந்துப் பெண்கள் 50 சதவீதப் பெண்களும் முடங்கிக் கிடக்கின்றார்கள் என்று பட்டியலிட்டுக் காட்டுகின்றது.
இது ஒருபுறம் இருக்க அரசு பணிகளில் முஸ்லிம்கள் சமீப காலத்தில் வேண்டுமென்றே ஒதுக்கப் படுகின்றார்களோ என்ற எண்ணம் கீழ்க்கண்ட உதாரணம் மூலம் தெரிகின்றது.
இந்திய மைய அரசில் ஆயுஸ் என்ற யோகா, யுனானி, ஆயுர்வேதம் ஆகியவற்றில் முஸ்லிம்கள் எத்தனை பேர்கள் வெளிநாட்டிற்கு அனுப்பப் பட்டுள்ளனர் என்ற ஆர்டிஐ(தகவல் உரிமை சட்டப்படி) கேட்கப் பட்ட கேள்விக்கு பதிலாக மைய அமைச்சரகம், 26 பேர் வெளி நாட்டினுக்கு யோகா கற்றுத் தருவதிற்காக, அனுப்பப் பட்டோரில் அந்த வேலைக்காக மனு செய்த 111 முஸ்லிம்களில் ஒருவர்கூட இல்லை என்ற தகவலுடன், அவர்களை அனுப்பச் சட்டத்தில் அனுமதியில்லை என்று கூறியிருப்பதாக பத்திரிக்கை படம் போட்டுக் காட்டுகின்றன என்று நீங்களும் படித்திருப்பீர்கள்.
ஏன் நாமும் இந்திய நாட்டுக் குடிமகன் தானே, அரசியலமைப்பில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மைனாரிட்டி சமூகத்தினவருக்குக் கொடுக்கப் படவேண்டும் அதனை ஏன் மறுக்கின்றார்கள் என்ற ஆதங்கம் உங்களுக்கு இருப்பது நியாயமே!
இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது என்று பார்க்கும்போது நீதிபதி சச்சார் குழு சொன்ன, 'ஈக்குவல் ஆப்பர்சுனடி கமிசன்'( சமமான வாய்ப்புக் குழு) இதுவரை மைய அரசு மற்றும் மாநில அரசுகள் அமைத்து, முஸ்லிம்கள் வேலை வாய்ப்பினை கூடுகளாகப் பெற எந்த முயற்ச்சியும் எடுக்கப் படவில்லை. பாராளுமன்றத்தில் ஒரு சில முஸ்லிம் உறுப்பினர்கள் எழுப்பினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது. அதற்கான எந்த முயற்ச்சியும் எந்த அரசும் செய்யவில்லை.

2) இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இருந்தாலும், அவர்கள் கல்வி கற்றிருந்தாலும், உயர் கல்வி முடித்தது அவர்களை திருமணம் செய்வித்து அடுக்களையிலேயே முடங்கச் செய்யும் நிலை ஏழைக் குடும்பமானாலும் இருக்கின்றது. ஒரு பெண்ணுக்கு பருவத்தில் திருமணம் செய்து வைப்பது ஒவ்வொரு தந்தையின் கடமையாகும் என்பதினை மறுக்கமுடியாது. ஆனால் உயர் கல்வி பெற்ற பெண்களை திருமணம் செய்த பிறகும் கூட நல்ல வேளையில் அமர்த்தினால் நடுத்தரக் குடும்பம் பொருளாதாரத்தில் முன்னேறும் அல்லவா?

3) முஸ்லிம்கள் கல்வி நிலையங்கள் தற்போது அதிகமாக இருப்பதினை மறுக்கமுடியாது. ஆனால் அவையெல்லாம் முஸ்லிம் மாணவர்களை அரசு வேலைக்கு எந்த விதத்தில் தயார் செய்கின்றன என்று பார்ப்போமேயானால் விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையங்கள் தான் உள்ளன. ஆனால் மற்ற மத கல்வி நிலையங்கள் இதற்காக தனியாக பயிற்சி நிலையங்கள் இலவசமாக நடத்துகின்றன.
ஒரு பொறியியல் படித்து வேலை இல்லாமல் இருக்கும் ஒரு  வாலிபனிடம் நீ ஐ.ஈ.எஸ். பரிட்சை எழுது உனக்கு சென்ட்ரல் பொறியியல் நிர்வாகத்தில்( CPWD) வேலை கிடைக்கும் என்றேன். அவனுக்கு அப்படி ஒரு பரீட்சை இருக்கின்றதா என்றும் கேட்டான். ஏன் முஸ்லிம்கள் நடத்தும் பொறியியல் கல்லூரிகளில் ஐ.ஈ.எஸ் பரீட்சைக்கு மாணவர்களை தயார் செய்யக்கூடாது. இந்தப் பரீட்சை ஐ.ஏ .எஸ் பரீட்சைக்கு நிகரானது அல்லவா?

4) சில முஸ்லிம் நிறுவனங்கள் இலவச ஐஏஸ் அகடாமி என்று பெயர் போட்டு மூன்று மாத கோச்சிங் கொடுப்பதிற்கு ரூ 30,000/ வசூல் செய்கின்றன. சில பணக்கார்கள் பெயரில் நடத்தும் பயிர்ச்சி மையங்கள் கூட வசூல் செய்வது பரிதாபமாக உள்ளது அல்லவா?

ஏன் ஒவ்வொரு முஸ்லிம் கல்வி நிலையங்களும் அரசு வேலை வாய்ப்பினுக்கான முகாந்தரங்களை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி, விருப்பம் உள்ள மற்றும் திறமை உள்ள  மாணவர்களுக்கு இலவச விடுதி, பயிற்சி மையங்கள் நடத்தக் கூடாது?
முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பினை முடித்த உடனேயே மாவட்டம் தோறும் இருக்கும் வேலை வாய்ப்பு நிறுவனங்களில் மாணவர்களை பதிய வைத்தால் சீனியாரிட்டி அடிப்படையில் அவர்களுக்கு அரசு வேலைக்கு அழைப்பு வரும். அத்துடன் பட்டப் படிப்பினை முடித்ததும் தனது மேல் படிப்பினை புதிப்பிக்க வேண்டும்.
ஒரு தடவை தமிழக அமைச்சர் ஒருவர் ஒரு முஸ்லிம் தலைவரைப் பார்த்து முஸ்லிம்கள் 'கருவாட்டு பாய்கள்' என்று அலட்சியமாக சொன்னது உங்களுக்கு நினைவூட்டுகிறேன். அவர் மேலும் ஒரு காலத்தில் அதே முஸ்லிம் ஒருவரிடம் தான்  கையூட்டாக ஒரு வைர நெக்லஸ் வாங்கினார் என்ற  குற்றம் சாட்டப்பட்டது ஒரு பக்கம் இருந்தாலும் முஸ்லிம்களின் பொருளாதார பரிதாப நிலையினை தான் அவர் அவ்வாறு கேலி செய்ய தூண்டுகிறது  என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.
முஸ்லிம் அரசியல் கட்சிகள் முகல்லா மாநாடு என்று போட்டு வேற்று மத அரசியல் தலைவர்களை அழைத்து பேசச் சொல்லும்போது அரசு வேலைகளுக்கு தகுதி இருப்பவர்களை முகல்லா தோறும் கண்டறிந்து பயிற்சி மையங்கள் நடத்தக் கூடாது. அவர்களுக்கு வேண்டியது அரசியல் தலைவர்கள் என்ற பெயரும் புகழும்தான், அத்துடன் அவர்கள் தூக்கி எறியும் ஓரிரு இடங்கள் தான் அதற்காக தன் மானத்தினையும், தன் சமூதாய மானத்தினையும் காற்றில் பறக்க விடலாமா?
இனிமேலாவது சமூதாயம் முன்னேற வழி வகுக்கப் பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டால் சரியா?

 



Monday 7 March, 2016

இஸ்லாமிய மார்க்கம் பறந்து, விரியக் காரணமென்ன?



(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச்.டி ஐ.பீ.எஸ்(ஓ)
இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கழைக் கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில் 2011 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தில் வேற்று மதத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஓடோடி வந்தவர்கள் 1,00,000(ஒரு லட்சம்) பேர்கள் என்று கூறுகிறது. அதில் ஆண்களை விட பெண்கள்  தான் அதிகம்  இஸ்லாமிய மார்க்கத்தினைத் தழுவியர்கள் என்று பட்டியல் போட்டுக் காட்டுகின்றது.  உங்களுக்கெல்லாம் தெரியும் அபாண்டமாக பழிசுமத்தி ஈராக் ஜனாதிபதி மாவீரன் சதாம் ஹுசைனை தூக்கு மேடைக்கு ஏற்றும் அளவிற்கும், இன்றும் ஈராக்கில் அமைதி வரமுடியாமல் செய்த முக்கியமானவர் என்று கருதப் படும் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயரும் ஒருவர் என்று. அவருடைய மனைவியின் சகோதரி சசெக்ஸ் ஏ வீவர் கூட இஸ்லாத்தினை தழுவியிருக்கின்றார் என்றால் பாருங்களேன். அவர் இஸ்லாத்திற்கு வந்த காரணத்தினை கீழ்கண்டவாறு கூறுகிறார்
1) இஸ்லாமிய மாணவர்களிடையே சகோதர பாசம் இருக்கின்றது.
2) அவர் மேற்காசிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது முஸ்லிம்கள் சொல்ல முடியா துன்பம் போர்களால் அனுபவித்தாலும் வாழ்க்கையில் பிடிப்புடன் அமைதியாக வாழ்கின்றனர். கடுமையான கட்டுப் பாடுடன் நோன்பு பிடித்தும், ஏழைகளுக்கு உதவியும், ஒழுக்க சிந்தனையுடன் வாழ்கின்றனர்.
3) மனித இனம் முழுவதும் மீட்கும் கோட்பாடு, பரந்த மனப் பான்மை, உதவிக்கு மூன்றாம் நபர் மூலம் கையேந்தாது, ஏக இறைவனிடம் நேராக உதவி கோரும் வழிபாடு.
4) எந்த விதத்திலும் இணக்கம் கொள்ளாத உணவு, உடை, சமூதாய, பாலின கட்டுப்பாடு
ஆகியவைகள் ஆகும்
12.1.2016 இல் யாகூ இணைய தளத்தின் அல் குரான், கிருத்துவர்கள் பழைய-புதிய கட்டளைகள்  ஆய்வுப் படி கிருத்துவ வேதங்களில் சொல்வதினை விட இஸ்லாமிய மார்க்கம் வன்முறைக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறுகிறது.
அகிலம் போற்றும் இறுதி நபி எம்பெருமானார் ரசூலல்லாஹ்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வால் வழங்கப் பட்ட வஹியினை தனி மனிதராக களத்தில் பல எதிர்ப்புக்கிடையே மக்களுக்கு எடுத்துச் சொன்னதினால் இன்று இஸ்லாமிய மார்க்கம் கிருத்துவமதத்திற்கு அடுத்த படியாக 162 கோடி மக்களை தன்னிடையே ஈர்த்துள்ளது என்று வேற்று மதத்தினவரும் போற்றுகின்றனர். அதற்கு மூல காரணம் என்னென்ன என்று சற்றே காணலாம்:
1)    நீங்கள் எந்த மத வழிபாடுத் தலங்களுக்கும் போங்கள், எங்காவது ஆரவாரம், அமளி, ஒலி பெருக்கி சத்தம் இல்லாமல் வழிபாடு நடக்கின்றதா அல்லது எந்த சடங்கும் இல்லாமல் நடக்கின்றதா அல்லது எந்த காணிக்கையும் இல்லாமல் தரிசனம் கிடைக்கின்றதா என்று பாருங்கள் கிடைக்காது. ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் உடுத்திய துணியுடன் தொழ வரும் நிலையினை காணுகின்றோம். 4.3.2016 அன்று சென்னை செம்புதாஸ் தெரு பள்ளிக்கு ஜும்மா தோழா சென்றிருந்தேன். என் பக்கத்தில் அமர ஒரு தோழர் வந்தார். அவர் அப்போதுதான் ஒழு செய்த முகத்தில் தண்ணீர் வழிய வந்து அமர்ந்தார். கையில் கைத்துண்டு இல்லை. மாறாக தனது கைலியின் முனையினைப் பிடித்து துடைத்துவிட்டு அமர்ந்தார். இதனை எதற்காகச் சொல்கின்றேன் என்றால் எந்த மாற்று வழிபாடு தளத்திற்காவது வெறும் கையோடு போகமுடியுமா?  வெள்ளிகிழமை பயானில் எழுப்பப் படும் சத்தத்தினை விடவும், தொழுகைக்காக அழைப்பு விடுவதினைத் தவிர எந்த ஒலி பரப்பும் செய்வதில்லை.
2)     எந்த மதத்திலாவது இறைவனால் அளிக்கப் பட்ட வேதத்தினை முழு மனனம் செய்தது உண்டா? ஆனால் இஸ்லாத்தில் அல் குரான் அத்தனை ஆயத்துக்களையும் மனனம் செய்து ஒரு வரி பிழையில்லாமல் அப்படியே ஒப்புவிக்கும் மார்க்கம் இஸ்லாம்.
3)     பல்வேறு கடவுள்களை தெய்வங்களாக வழிப் பட்டு வந்த காலக்கட்டத்தில் அல்லாஹ் ஒருவனே இறைவன், மற்றவைக்கு எந்த சக்தியும் இல்லை என்று பல்வேறு எதிர்ப்புக்கிடையே சொன்னது ரசூலல்லாஹ் தான் என்று உலகமே ஒப்புக்கொள்கிறது. அது மட்டுமல்ல அந்தக் காலக்கட்டத்தில் தனக்கு  என்று எந்த பலமும், பரிவர்த்தமும் கூடாது, நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான் என்று தன்னை ஒரு சாமானியன் என்று சொல்லி மற்ற மதங்களின் போதகர்களை விட தனித்து நின்று வளர்க்கப் பட்ட மார்க்கம்.
4)     பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்களை நல்வழிப் படுத்த மண்ணில் பிறந்த 1,70,000 நபிமார்களில் நானும் ஒருவன், அதில் கடைசி நபியும் நானே என்று அனைத்து நபிமார்களையும் அங்கீகரித்தது இஸ்லாம்.
5)    நீங்கள் ஒரு பள்ளிக் கூடத்திற்கு சென்றீர்கள் என்றால் முதலில் மாணவர்களுக்குச் சொல்லித் தருவது, 'எப்படி ஒழுக்கத்தினை கடைப் பிடிக்க வேண்டும்' (கோட் ஆப் காண்டக்ட்) என்பது தான்  என்று அறிவீர்கள். அதே போன்று அல் குரானில் வருகின்ற அத்தனை ஆயத்துக்களும், மக்களிடையே ஒழுக்க சிந்தனைகளைத் தூண்டுவையாகத் தான் இருக்கின்றது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.
6)    கலிமா: ஏக இறைவனுக்கும், இறுதி நபிக்கும் ஈமான் கொள்வது.
7)    தொழுகை: காசுகொடுத்து பயிற்சிபெறாது, மனித மனதினை மனம் போன போக்கில் அலைய விடாது டென்சனை குறைக்கக் கூடிய சிறந்த யோகா.
8)    நோன்பு: மின்சார ஆபீசில் சில சமயம் கரண்ட் வினியோகத்தினை நிறுத்தி விடுவார்கள், கேட்டால் பழு பார்க்கும் ‘மைன்டனன்ஸ்’ என்று பதில் வரும். சாதாரண எந்திரங்களுக்கே ஓய்வு தேவைப்படும் போது, வருடம் முழுவது உண்ணுவது மூலம் களைத்திருக்கும் உடல் உறுப்புகளுக்குத் தேவைப்படாதா? ஆகவே தான் மனிதன் நோன்பு மூலம் புத்துணர்வு பெற வழியிறுத்தப் பட்டது.  நோன்பு மூலம் புற்று நோய் போன்ற கொடிய நோய்களையும் தடுத்து விடுகிறது.
9)    ஜக்காத்: பொருள் மலை போன்று ஒருவரிடமே குவியாது, கடல் போன்று, 'பகிர்ந்துண்டால் பால் மணக்கும்' என்று சொல்லும் பழமொழிக்கேற்ப ஈகை பழக்கத்தினை சிறு வயதிலேயே போதிக்கும் மார்க்கம்.
10) ஹஜ்: வசதி, வாய்ப்புள்ளவர் எல்லாம் வல்ல அல்லாஹிவினை முதன் முதல் வழிபாட்டுத் தளம், மற்றும் நபிமார்கள் வாழ்ந்த வரலாற்று சிறப்பு மிக்க நகர்களைக் காணுவது.
அது சரி சார், ஏன் இஸ்லாமிய உலகில் சண்டை, சச்சரவு, போர் என்று கேட்கலாம். காரணம் நாம் பல்வேறு விதத்தில் பிரிந்து நிற்பதினால், பலமற்று இருக்கின்றோம். நான் கேட்கின்றேன், இறைவனால் கொடுக்கப் பட்ட செல்வக் கொழிப்பு இஸ்லாமிய நாடுகளில் இல்லையா, இஸ்லாமியருக்கு உடல் வலிமை இல்லையா, இஸ்லாமியருக்கு அறிவு இல்லையா, அத்தனையும் இருந்தாலும் மேலை நாடுகள் இஸ்லாமிய உலகம் பிரிந்து இருந்தால் தான் தாங்கள் ஆயுத கடைகள் நடத்தமுடியும், இஸ்லாமிய உலகில் உள்ள செல்வங்களை சுரண்ட முடியும் என்று நினைத்து இஸ்லாமியரை பிரித்தாளும் கொள்கைகளுக்கு பலிகிடாவாக்கி விடுகிறார்கள் என்றே சொல்லலாம். அராபிய, ஆப்ரிக்கா, ஆசிய முஸ்லிம் நாடுகள் மேலை நாடுகளின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடு பட்டாலும், மேலை நாடுகளின் ஆதிக்கத்திலேயே இன்னும் முஸ்லிம் நாடுகள் உள்ளன. வட கொரியா நாட்டினைப் பாருங்கள்,  மேலை நாடுகளிடம் இருந்து பல மிரட்டல்கள் வந்தாலும் தனது நாட்டின் இறையாமையினை   விட்டுத் தர மறுக்கின்றது.
ஆனால் இஸ்லாமிய நாடுகள் மேலை நாடுகளுக்கு காவடி தூக்குவதால், தங்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாததால்  இஸ்லாமிய மக்கள் அகதிகளாக ஒவ்வொரு நாடுகளுக்கும் ஓடுகின்றனர் செல்வமிருந்தும்.
முஸ்லிம் நாடுகளில் அரசாட்சி செய்பவர்கள் தங்களுடைய ஈகோவினை தூக்கி எறிந்து, மக்கள் நலமே மன்னர் நலம் என்று மக்களின் நல வாழ்விற்கு வழி வகுக்க வேண்டும். அதே போன்று பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களும் ஒற்றுமையினை ஒரு முழக்கமாக வீதி, முகல்லா தோறும் எழுப்ப வேண்டும்.

எம்பெருமானார் ரசூலல்லாஹ்(ஸல்) அவர்கள் மக்கள் தலைவராக இருந்தாலும் பேரீத்த மர ஓலைக் கீற்றில்  படுத்துத் தூங்கி எளிமைக்கு உதாரணமாக இருந்தார்கள். கலிபா உமர் போன்ற ஆட்சியினை மகாத்மா காந்தி இந்தியாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்று கனவு காணும் அளவிற்கு இஸ்லாமிய ஆட்சி செய்த மக்கள் இன்று ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளால் இஸ்லாமிய உலகமே அனாதையாக உள்ளது உங்களுக்கெல்லாம் பரிதாபமாக தோணவில்லையா?
ஆகவே இஸ்லாமிய உலகம் மக்கள் நலம் கொண்டதாக இருக்க வேண்டும், மன்னர் ஆடம்பரத்திற்கும், பிரித்தாளும் கொள்கைகளுக்கும் வழிவகுத்து இஸ்லாமியரை பலிகிடாவாக்கிவிடக்கூடாது.

முதியோர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கண்ணின் மணிபோல பாதுகாத்து, சமூதாய ஒற்றுமை குழையாது பார்த்துக் கொண்டால் 162 கோடி மக்கள் வளர் பிறை போல மேலும் வளர வாய்ப்பும், மற்ற மத மக்கள் கடலை நோக்கி ஓடி வரும் ஆறுகள் போல ஓடி வருவருவார்கள் என்பது சரியாகுமா சகோதர, சகோதரிகளே!

Wednesday 2 March, 2016

மலேசிய சுற்றுப் பயணத்தில் சில ருசீகரத் தகவல்கள்!



(டாக்டர் .பீ. முகமது அலி, பிஎச்.டி; .பீ.எஸ்( )
என்னுடைய தந்தை மலேசியாவில் 50 ஆண்டுகள் வசித்தவர்கள் என்பதால் நான் மலேசியா நாட்டிற்கு பலமுறை சென்றிருந்தாலும், நான் கண்ட சில சுவைக்கத் தக்க செய்திகளை இணைய தளங்களில் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு நான் பணியில் இருந்த நேரங்களில் பகிர்ந்து கொள்ள முடிய வில்லை. ஆகவே நான் 2016இல் பிப்ரவரி-மார்ச்  மாதங்களில்  சுற்றுப் பயணத்தில் அறிந்த சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைகின்றேன். அதனை அங்கு சென்ற சிலரும் கண்டு இருப்பீர்கள்.
1965 ஆம் ஆண்டு சிங்கபூர் நாடு, மலேசியா கூட்டாச்சியிலிருந்து பிரிந்த பின்பு, மலேசியாவின் அதிகாரப் பூர்வ மார்க்கமாக இஸ்லாம் அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில், முஸ்லிம் அல்லாதோர் தங்களுடைய மத வழிபாடுகளுக்கு எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை என்பதினை ஜனவரி மாதம் நடந்த தைப் பூச திருவிழாவிற்கு பட்டு மலையில் இருக்கும் முருகன் குகைக் கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்த்தர்கள் சென்றது காண முடிந்தது. அதற்கான அனைத்து வசதியினையும் மலேசியா அரசு செய்து தந்திருந்தது. செலாங்கூர் சுல்த்தானே அங்கு சென்றது அவர்களை கவுரவிக்கும் விதமாக இருந்தத என்று ஹிந்து மக்கள் புகழ்ந்ததினைக் காண முடிந்தது. இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற பாலமாக அமைந்திருந்தது.
2010 சென்சஸ் படி முஸ்லிம்கள் 61.3 விழுக்கடுகளும், புத்த மதத்தினர் 19.8%,  கிருத்துவர் 9.2%,ஹிந்துக்கள் 1.3%, மற்ற சமூகத்தினவர் 1.4% ஆவர். புத்த மதத்தினவர் 19.8% ஆனாலும் 83.6 சதவீதத்தினவர் சீனர்கள் ஆவர். ஆகவே தான் சீன புது வருடத்தில் ஒரு வாரம் அங்கே விடுமுறை விடப் படுகிறது. முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் திருமணம், வாரிசு, விவாகரத்து, மதமாறுதல் போன்றவை  சரீயத் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இஸ்லாமிய நீதிபதிகள் ஷாபி மதகுப் படி தீர்ப்பு வழங்குகிறார்கள். ஆனால் மற்ற கிரிமினல், சிவில் குற்றங்களை சரீயத் கோர்ட்டு விசாரிக்காது. அதற்கான தனி நீதி மன்றங்கள் உள்ளன.
இது சம்பந்தமான 10.2.2016இல் பெடரல் நீதி மன்றத்தில் நடந்த ஒரு சுவையான வழக்கினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன். ஹிந்து மதத்திலிருந்து முஸ்லிமான இஸ்வானும், அவருடைய ஹிந்து மனைவி தீபாவிற்கு மூத்த பெண் குழந்தையும், இளைய ஓர் ஆண் குழந்தையும் உண்டு. தந்தை இஸ்லாமிய மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மகளுக்கு சர்மிளா என்ற பெயரினை மாற்றி நூருல் நபிலா என்றும், மகனுக்கு மித்திரன் என்ற பெயரை மாற்றி நபில் என்றும் பெயர் வைத்தார். மகளை ஜோகர் பாரில் ஒரு இண்டர்நேசனல் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். மகனை கோலா பிலாவில் இருக்கும் பள்ளியில் சிறப்பாக படிக்க வைத்தார். மனைவி தீபா இஸ்லாமிய மார்க்கத்திற்கு வர மறுத்ததால், மனைவியினை விவாக ரத்து செய்து விட்டார். தற்போது குழந்தைகள் இருவரையும் மனைவி தீபா தன்னுடைய பாதுகாப்புக் கேட்டு  சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அதில் குழந்தைகளை தீபாவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதனை கணவர் ரிஸ்வான் எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்றார். அங்கேயும் தீபாவிற்கு சாதகமாகவே வழக்கு அமைந்தது. அந்தத் தீர்ப்பினையும் எதிர்த்து ரிஸ்வான் பெடரல் நீதி மன்றத்தில் முறையிட்டார். அதனை விசாரித்த மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மகள் நூருல் நபிலாவினையும், மகன் நபிளையும் தங்கள் அறையில் 40 நிமிடங்கள் தனித்தனியே விசாரித்தார்கள். அதன் பின்பு மகளை தாயாரான தீபாவிடமும் , மகனை  தந்தையான ரிஸ்வானுடனும் அனுப்பி வைத்தார்கள். கோர்ட்டை விட்டு வரும்போது மகள் நபிலா திருநீறு பூசி வருவதும், மகன் நபில் தலையில் தொப்பி அணிந்து இஸ்லாமிய முறைப்படி தந்தை இஸ்வானுடனும் உள்ள படத்தினை செல்லும்  படத்தினை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். இதனிலிருந்து மலேசியா நாடு சரீயத் சட்டத்துடன், சிவில் சட்டத்தினையும் செயல் படுத்துகின்றது என்பது தெளிவாகின்றதல்லவா?
22.1.2016 அன்று கோலாலம்பூர் சுல்தான் பள்ளிக்கு ஜூம்மா தொழுகச் சென்றேன். ஒரே நேரத்தில் 10,000 பேர் நின்று தொழும் அளவிற்கு வசதி உள்ளது. இங்குள்ள ஜும்மா குத்பாவிற்கும் அங்குள்ள குத்பாவிற்கும் வித்தியாசம் என்ன வென்றால், பள்ளியில் அன்று என்ன தலைப்பில் பேச வேண்டும் என்று, மத சார்பான இலாகா ஒரு சுற்றறிக்கை அனுப்புகின்றது. அன்று பேச வேண்டிய தலைப்பினை பெரிய டி.வி. திரையில் காட்டப் படுகிறது. அன்றையத் தலைப்பு , 'லூஸ் ஹோப்-டிமாளிஸ் லைப்' ஆகும் (நம்பிக்கை இழப்பது வாழ்க்கைக்கு அழிவு). அதன் படியே
ஜூ ம்மா பாயான் செய்யப் பட்டது. மலாய் மொழியில் பாயான் செய்தால் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து காட்டப் படுகிறது. குரான் ஆயத்தும் அத்துடன் காட்டப் படுகிறது. ஆகவே ஜும்மா தொழும் முஸ்லிம்கள் கவனம் சிதறாது அல்லது தூங்கி வளியாது பார்த்துக் கொள்ளப் படுகிறது.
இங்குள்ள பள்ளிகளில் இமாம் அவர்  நினைத்ததினை, பத்திரிக்கை செய்தியினை, அரசியல் சார்ந்த கருத்துக்களை எல்லாம் தான் எல்லாம் தெரிந்தவர் என்றும், தான் பேசும் போது யாரும் கேட்க மாட்டார்கள் என்றும் ஜூம்மா நேரத்தில்  பயான்  செய்யப்படுவதினை நாம் காண்கின்றோம். அனேக பள்ளி நிர்வாகத்தினர் அதிகம் மார்க்க சம்பந்தமாக அவ்வளவு மார்க்க ஞானம் இல்லாதததாலும், சில இமாம்கள் தங்கள் ஆளுமையால் பள்ளியின் நிர்வாகத்தினை தன் கட்டுப்பாடில் கொண்டு வருவதாலும்  இது போன்று நிகழ்கின்றது என்றே கூறலாம்.
எந்த பள்ளிக்காவது பெண்கள் தொழ  வரும்போதோ அல்லது பள்ளியின் அழகைக் காண வரும்போதோ  முழு அங்கியில் தான் வரவேண்டும். பெண்கள் சேலை கட்டி வந்தாலோ அல்லது வேறு விதமான ஆடை அணிந்திருந்தாலோ அவர்கள் அணிய முழு அங்கி வாடைகைக்கு வழங்கப் படுகிறது  என்பதினை மலாக்கா மிதக்கும் பள்ளிக்குச் சென்றபோதும், புத்ராஜெயா பள்ளிக்கு சேலைக் கட்டிய என் மனைவியுடன் சென்றபோதும் இதனைத் தெரிந்து கொண்டேன்.
எனது பயணத்தின் சிறப்பம்சமாக அமைந்தது கோலாலும்பூரில் உள்ள, 'இஸ்லாமிக் ஆர்ட் அண்ட் மியூஸியம்' ஆகும். 1998 ஆம் ஆண்டு 30,000 சதுர அடியில் தென் கிழக்கு ஆசியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் அமைந்துள்ள காலரிகளை விடப் பெரியதாகும். உலக முஸ்லிம்கள் வரலாறு சொல்லும் 12 நிரந்தர அரங்குகள், ஒரு சிறப்பு காலரி மற்றும் ஒரு திறந்த வெளி அரங்கமாகும்.இந்த காலரிகளில் மிக சிறியளவு நகையிலிருந்து, பெரியளவு  மக்கா அல் ஹரமின் வரை சிறந்த தொழில் நுட்ப அமைப்புகளுடன் அடங்கிய கலை நுணுக்கங்கள் காண முடிந்தது. அரங்குகளில் முக்கிய மானவை  1) சிற்பக்கலை 2) அல்குரான் கையெழுத்துப் பிரதிகள் 3) நகைகள் காலரி 4) துணி வகை அரங்கம் 5) மர வேலைப்பாடு 6) ஆயுத அரங்கம் 7)  இஸ்லாமியர் பயன் படுத்திய நாணயங்கள், அரசு முத்திரைகள் 8) உலோக வேலைப் பாடுகள் 9) மட்பாண்ட வேலைப் பாடுகள் 9) இந்தியா 10) சீனா 11) மலாய் உலகம் அரங்கங்கள் முக்கியமானவை ஆகும்.
31.1.2016 அன்று கோலலும்பூரில் உள்ள முனிசிபால் அரங்கில் ஆயிரம் முஸ்லிம் கல்லூரி  மாணவர் கொண்ட அரங்கில், 'வருங்கால வெளிநாடு மற்றும் உள்நாட்டின் மேல்படிப்பு, வேலை வாய்ப்பு, விடா முயற்சி' பற்றிய கருத்தரங்கிற்கு பார்வையாளராகச் சென்றேன். காலையிலிருந்து மாலை வரை பல்வேறு துறைகளில் வாழ்க்கையில் வெற்றிகண்ட டத்தோ இக்பால், டத்தோ சையது இப்ராஹிம், சிவாவாகி இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறி தொலைக் காட்சி நிகழ்சிகளில் பிரபலாமாகிய மாலிக் போன்ற முஸ்லிம் பெரியவர்களை அழைத்து கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப் பட்டது. இது போன்று மாதம் ஒரு முறை நடத்துவதால் மாணவர்கள், இளைஞர்கள் தன் நம்பிக்கை இழக்காமல் இருப்பதாக அமைப்பாளர்கள் சொன்னார்கள். நாமும் ஒவ்வொரு கல்லூரி, பள்ளிகளில் இது போன்ற நிகழ்சிகளை நடத்தினால் நிச்சயமாக மாணவர்கள் முன்னேற வழி வகுக்கும்.
மார்க்க  சம்பந்தமில்லாத பொதுவான தகவல் சில
1)      சென்னையினைச் சுற்றி ஓடும் இரண்டு முக்கிய நதிகள் என்றால் 1) பக்கிங்காம் ஆறு 2) கூவம் ஆறு. ஆனால் அதன் அருகில் சென்றால் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்லத்தான் வேண்டும். ஆட்சிக்கு வரும் கட்சிகள் எல்லாம் இரண்டையும் இங்கலாந்தில் உள்ள தேம்ஸ் நதி போன்று சுற்றுலா மையமாக்குவோம் என்று சூளுரைத்து, அதற்கான பட்ஜெட் ஒதுக்கி கூவத்தின் நாற்றமடித்த அரசியல் ஆறில் கலந்ததுதான் மிச்சம். ஆனால் மலாக்காவில் நகரின் மத்தியில் ஓடும் நதியில் சீரமைத்து, போட் சவாரி ஏற்பாடு செய்து  கண்கவர் சுற்றுலா மையமாக்கி வெளி நாட்டினவரையும் கவர்ந்துள்ளார்கள்
2)      2) நாமெல்லாம் கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிச்சாவரம் சென்று அங்கு கடலோடு ஒட்டி வளர்ந்திருக்கும் மாங்க்ரோவ்  செடிகளைக் காண படகுகளில் பகல் நேரத்தில் அழைத்துச் செல்வதினை பார்த்திருக்கின்றோம். நமது ஊர்களில் புல்களில் செடிகளில் இரவு நேரங்களில் மின்னும்  மின்மினு பூச்சிகளை எடுத்து கைலிகளில், கைத்துண்டுகளில் வைத்து வெளிச்சம் வருவதினைப் பார்த்திருக்கின்றோம். அதுபோன்று செலாங்கோர் கோலாப் பகுதியில் கடலில் தண்ணீர் அளவிற்கு வளர்ந்த செடிகளில் இருக்கும் மின்மினி பூச்சிகளைக் காண இரவு நேரங்களில் படகு மூலாம் அழைத்துச் செல்கிறார்கள். அந்த செடிகளில் உள்ள மின்மினி பூச்சிகள் இரவில் நீல நிற வானில் மின்னும் நட்ச்சத்திரமாக இருப்பது மிகவும் அழகு வாய்ந்தது. இதேபோன்று பிச்சாவரத்திலும் அமைந்தால் சுற்றுலா பயணிகள் இழுக்கும் மையமாக இருக்கும்.
3)      3) மலாசியாவின் கிரீடமாக அமைந்திருப்பது புத்ர ஜெயா என்ற அரசு அலுவலகம் ஆகும். புத்திர ஜெயா என்பது சான்ஸ்க்ரிட் மொழியில் அரசக் குழந்தை என்று அழைக்கப் படும். இது கோலாலம்பூர் நகரை விட்டு 25 கி.மீ. தெற்கில் அமைக்கப் பட்ட 2001 ஆம் ஆண்டு.அரசாங்க தலைமைப் பீடமாகும். இந்த நகருக்குச் செல்ல தனி 6-பாதை சாலை அமைக்கப் பட்டுள்ளது. இதனில் மன்னர், பிரதமர், மந்திரிகள்  தலைமையிடத்திலிருந்து கடைநிலை ஊழியர் வரை பணி புரியும் அலுவலகம் உள்ளது. அத்துடன் அங்குள்ள ஊழியருக்கு தனித் தனியே குடியிருப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதனை நீண்ட ஆண்டு பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர் முகமது காலத்தில் சிந்தித்து செயலாக்கப் பட்டுள்ளது. பசுமைக் கட்டிடத்திற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும். இரவு நேரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக இதன் அலங்கார விளக்கில் ஜொலிக்கும் கட்டிடங்களைக் காண ஆயிரக்கணக்கில் வருகின்றனர். இங்குள்ளது போன்று எந்த கெடுபிடியும் இல்லை. இந்தியாவில் பஞ்சாபினை விட்டு ஹரியானா பிரிந்தபோது ஒரு சண்டிகார் என்ற புது நகரம் உருவாக்கப் பட்டது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம். சென்னையிலும் அண்ணா சாலையில் போக்குவரத்து மிகுந்த இடத்தில் வெறும் அலுவலுக்கு மட்டும் ரூ.1400 கோடியில் கட்டப் பட்டது. ஆனால் அது இப்போது மருத்துவமனையாகி விட்டது. இதனையே வண்டலூர் அருகில் உள்ள அரசு நிலத்தில் தலைமைச் செயலகம் கட்டி, அங்கேயே தலைமைச் செயலக ஊழியர் தங்க வீடுகளும் கட்டிக் கொடுத்து இருக்கலாம். தற்போதுள்ள ஊழியர் வீடுகளான பட்டிணப்பாக்கம் இடிக்கப் பட்டும், லாயட்ஸ் ரோடு குடியிருப்பு இடியும் நிலையில் இருப்பதினை மனதில் கொண்டு அந்த நடவடிக்கை எடுத்து இருந்தால் தற்போதுள்ள கட்டிடத்தில் பிரச்சனையே வந்திருக்காது.
என்னுடைய பயணக்கட்டுரையில் ரசித்த சில சம்பவங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.   தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் பயனாக இருக்கும்.