Wednesday 2 March, 2016

மலேசிய சுற்றுப் பயணத்தில் சில ருசீகரத் தகவல்கள்!



(டாக்டர் .பீ. முகமது அலி, பிஎச்.டி; .பீ.எஸ்( )
என்னுடைய தந்தை மலேசியாவில் 50 ஆண்டுகள் வசித்தவர்கள் என்பதால் நான் மலேசியா நாட்டிற்கு பலமுறை சென்றிருந்தாலும், நான் கண்ட சில சுவைக்கத் தக்க செய்திகளை இணைய தளங்களில் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு நான் பணியில் இருந்த நேரங்களில் பகிர்ந்து கொள்ள முடிய வில்லை. ஆகவே நான் 2016இல் பிப்ரவரி-மார்ச்  மாதங்களில்  சுற்றுப் பயணத்தில் அறிந்த சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைகின்றேன். அதனை அங்கு சென்ற சிலரும் கண்டு இருப்பீர்கள்.
1965 ஆம் ஆண்டு சிங்கபூர் நாடு, மலேசியா கூட்டாச்சியிலிருந்து பிரிந்த பின்பு, மலேசியாவின் அதிகாரப் பூர்வ மார்க்கமாக இஸ்லாம் அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில், முஸ்லிம் அல்லாதோர் தங்களுடைய மத வழிபாடுகளுக்கு எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை என்பதினை ஜனவரி மாதம் நடந்த தைப் பூச திருவிழாவிற்கு பட்டு மலையில் இருக்கும் முருகன் குகைக் கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்த்தர்கள் சென்றது காண முடிந்தது. அதற்கான அனைத்து வசதியினையும் மலேசியா அரசு செய்து தந்திருந்தது. செலாங்கூர் சுல்த்தானே அங்கு சென்றது அவர்களை கவுரவிக்கும் விதமாக இருந்தத என்று ஹிந்து மக்கள் புகழ்ந்ததினைக் காண முடிந்தது. இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற பாலமாக அமைந்திருந்தது.
2010 சென்சஸ் படி முஸ்லிம்கள் 61.3 விழுக்கடுகளும், புத்த மதத்தினர் 19.8%,  கிருத்துவர் 9.2%,ஹிந்துக்கள் 1.3%, மற்ற சமூகத்தினவர் 1.4% ஆவர். புத்த மதத்தினவர் 19.8% ஆனாலும் 83.6 சதவீதத்தினவர் சீனர்கள் ஆவர். ஆகவே தான் சீன புது வருடத்தில் ஒரு வாரம் அங்கே விடுமுறை விடப் படுகிறது. முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் திருமணம், வாரிசு, விவாகரத்து, மதமாறுதல் போன்றவை  சரீயத் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இஸ்லாமிய நீதிபதிகள் ஷாபி மதகுப் படி தீர்ப்பு வழங்குகிறார்கள். ஆனால் மற்ற கிரிமினல், சிவில் குற்றங்களை சரீயத் கோர்ட்டு விசாரிக்காது. அதற்கான தனி நீதி மன்றங்கள் உள்ளன.
இது சம்பந்தமான 10.2.2016இல் பெடரல் நீதி மன்றத்தில் நடந்த ஒரு சுவையான வழக்கினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன். ஹிந்து மதத்திலிருந்து முஸ்லிமான இஸ்வானும், அவருடைய ஹிந்து மனைவி தீபாவிற்கு மூத்த பெண் குழந்தையும், இளைய ஓர் ஆண் குழந்தையும் உண்டு. தந்தை இஸ்லாமிய மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மகளுக்கு சர்மிளா என்ற பெயரினை மாற்றி நூருல் நபிலா என்றும், மகனுக்கு மித்திரன் என்ற பெயரை மாற்றி நபில் என்றும் பெயர் வைத்தார். மகளை ஜோகர் பாரில் ஒரு இண்டர்நேசனல் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். மகனை கோலா பிலாவில் இருக்கும் பள்ளியில் சிறப்பாக படிக்க வைத்தார். மனைவி தீபா இஸ்லாமிய மார்க்கத்திற்கு வர மறுத்ததால், மனைவியினை விவாக ரத்து செய்து விட்டார். தற்போது குழந்தைகள் இருவரையும் மனைவி தீபா தன்னுடைய பாதுகாப்புக் கேட்டு  சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அதில் குழந்தைகளை தீபாவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதனை கணவர் ரிஸ்வான் எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்றார். அங்கேயும் தீபாவிற்கு சாதகமாகவே வழக்கு அமைந்தது. அந்தத் தீர்ப்பினையும் எதிர்த்து ரிஸ்வான் பெடரல் நீதி மன்றத்தில் முறையிட்டார். அதனை விசாரித்த மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மகள் நூருல் நபிலாவினையும், மகன் நபிளையும் தங்கள் அறையில் 40 நிமிடங்கள் தனித்தனியே விசாரித்தார்கள். அதன் பின்பு மகளை தாயாரான தீபாவிடமும் , மகனை  தந்தையான ரிஸ்வானுடனும் அனுப்பி வைத்தார்கள். கோர்ட்டை விட்டு வரும்போது மகள் நபிலா திருநீறு பூசி வருவதும், மகன் நபில் தலையில் தொப்பி அணிந்து இஸ்லாமிய முறைப்படி தந்தை இஸ்வானுடனும் உள்ள படத்தினை செல்லும்  படத்தினை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். இதனிலிருந்து மலேசியா நாடு சரீயத் சட்டத்துடன், சிவில் சட்டத்தினையும் செயல் படுத்துகின்றது என்பது தெளிவாகின்றதல்லவா?
22.1.2016 அன்று கோலாலம்பூர் சுல்தான் பள்ளிக்கு ஜூம்மா தொழுகச் சென்றேன். ஒரே நேரத்தில் 10,000 பேர் நின்று தொழும் அளவிற்கு வசதி உள்ளது. இங்குள்ள ஜும்மா குத்பாவிற்கும் அங்குள்ள குத்பாவிற்கும் வித்தியாசம் என்ன வென்றால், பள்ளியில் அன்று என்ன தலைப்பில் பேச வேண்டும் என்று, மத சார்பான இலாகா ஒரு சுற்றறிக்கை அனுப்புகின்றது. அன்று பேச வேண்டிய தலைப்பினை பெரிய டி.வி. திரையில் காட்டப் படுகிறது. அன்றையத் தலைப்பு , 'லூஸ் ஹோப்-டிமாளிஸ் லைப்' ஆகும் (நம்பிக்கை இழப்பது வாழ்க்கைக்கு அழிவு). அதன் படியே
ஜூ ம்மா பாயான் செய்யப் பட்டது. மலாய் மொழியில் பாயான் செய்தால் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து காட்டப் படுகிறது. குரான் ஆயத்தும் அத்துடன் காட்டப் படுகிறது. ஆகவே ஜும்மா தொழும் முஸ்லிம்கள் கவனம் சிதறாது அல்லது தூங்கி வளியாது பார்த்துக் கொள்ளப் படுகிறது.
இங்குள்ள பள்ளிகளில் இமாம் அவர்  நினைத்ததினை, பத்திரிக்கை செய்தியினை, அரசியல் சார்ந்த கருத்துக்களை எல்லாம் தான் எல்லாம் தெரிந்தவர் என்றும், தான் பேசும் போது யாரும் கேட்க மாட்டார்கள் என்றும் ஜூம்மா நேரத்தில்  பயான்  செய்யப்படுவதினை நாம் காண்கின்றோம். அனேக பள்ளி நிர்வாகத்தினர் அதிகம் மார்க்க சம்பந்தமாக அவ்வளவு மார்க்க ஞானம் இல்லாதததாலும், சில இமாம்கள் தங்கள் ஆளுமையால் பள்ளியின் நிர்வாகத்தினை தன் கட்டுப்பாடில் கொண்டு வருவதாலும்  இது போன்று நிகழ்கின்றது என்றே கூறலாம்.
எந்த பள்ளிக்காவது பெண்கள் தொழ  வரும்போதோ அல்லது பள்ளியின் அழகைக் காண வரும்போதோ  முழு அங்கியில் தான் வரவேண்டும். பெண்கள் சேலை கட்டி வந்தாலோ அல்லது வேறு விதமான ஆடை அணிந்திருந்தாலோ அவர்கள் அணிய முழு அங்கி வாடைகைக்கு வழங்கப் படுகிறது  என்பதினை மலாக்கா மிதக்கும் பள்ளிக்குச் சென்றபோதும், புத்ராஜெயா பள்ளிக்கு சேலைக் கட்டிய என் மனைவியுடன் சென்றபோதும் இதனைத் தெரிந்து கொண்டேன்.
எனது பயணத்தின் சிறப்பம்சமாக அமைந்தது கோலாலும்பூரில் உள்ள, 'இஸ்லாமிக் ஆர்ட் அண்ட் மியூஸியம்' ஆகும். 1998 ஆம் ஆண்டு 30,000 சதுர அடியில் தென் கிழக்கு ஆசியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் அமைந்துள்ள காலரிகளை விடப் பெரியதாகும். உலக முஸ்லிம்கள் வரலாறு சொல்லும் 12 நிரந்தர அரங்குகள், ஒரு சிறப்பு காலரி மற்றும் ஒரு திறந்த வெளி அரங்கமாகும்.இந்த காலரிகளில் மிக சிறியளவு நகையிலிருந்து, பெரியளவு  மக்கா அல் ஹரமின் வரை சிறந்த தொழில் நுட்ப அமைப்புகளுடன் அடங்கிய கலை நுணுக்கங்கள் காண முடிந்தது. அரங்குகளில் முக்கிய மானவை  1) சிற்பக்கலை 2) அல்குரான் கையெழுத்துப் பிரதிகள் 3) நகைகள் காலரி 4) துணி வகை அரங்கம் 5) மர வேலைப்பாடு 6) ஆயுத அரங்கம் 7)  இஸ்லாமியர் பயன் படுத்திய நாணயங்கள், அரசு முத்திரைகள் 8) உலோக வேலைப் பாடுகள் 9) மட்பாண்ட வேலைப் பாடுகள் 9) இந்தியா 10) சீனா 11) மலாய் உலகம் அரங்கங்கள் முக்கியமானவை ஆகும்.
31.1.2016 அன்று கோலலும்பூரில் உள்ள முனிசிபால் அரங்கில் ஆயிரம் முஸ்லிம் கல்லூரி  மாணவர் கொண்ட அரங்கில், 'வருங்கால வெளிநாடு மற்றும் உள்நாட்டின் மேல்படிப்பு, வேலை வாய்ப்பு, விடா முயற்சி' பற்றிய கருத்தரங்கிற்கு பார்வையாளராகச் சென்றேன். காலையிலிருந்து மாலை வரை பல்வேறு துறைகளில் வாழ்க்கையில் வெற்றிகண்ட டத்தோ இக்பால், டத்தோ சையது இப்ராஹிம், சிவாவாகி இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறி தொலைக் காட்சி நிகழ்சிகளில் பிரபலாமாகிய மாலிக் போன்ற முஸ்லிம் பெரியவர்களை அழைத்து கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப் பட்டது. இது போன்று மாதம் ஒரு முறை நடத்துவதால் மாணவர்கள், இளைஞர்கள் தன் நம்பிக்கை இழக்காமல் இருப்பதாக அமைப்பாளர்கள் சொன்னார்கள். நாமும் ஒவ்வொரு கல்லூரி, பள்ளிகளில் இது போன்ற நிகழ்சிகளை நடத்தினால் நிச்சயமாக மாணவர்கள் முன்னேற வழி வகுக்கும்.
மார்க்க  சம்பந்தமில்லாத பொதுவான தகவல் சில
1)      சென்னையினைச் சுற்றி ஓடும் இரண்டு முக்கிய நதிகள் என்றால் 1) பக்கிங்காம் ஆறு 2) கூவம் ஆறு. ஆனால் அதன் அருகில் சென்றால் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்லத்தான் வேண்டும். ஆட்சிக்கு வரும் கட்சிகள் எல்லாம் இரண்டையும் இங்கலாந்தில் உள்ள தேம்ஸ் நதி போன்று சுற்றுலா மையமாக்குவோம் என்று சூளுரைத்து, அதற்கான பட்ஜெட் ஒதுக்கி கூவத்தின் நாற்றமடித்த அரசியல் ஆறில் கலந்ததுதான் மிச்சம். ஆனால் மலாக்காவில் நகரின் மத்தியில் ஓடும் நதியில் சீரமைத்து, போட் சவாரி ஏற்பாடு செய்து  கண்கவர் சுற்றுலா மையமாக்கி வெளி நாட்டினவரையும் கவர்ந்துள்ளார்கள்
2)      2) நாமெல்லாம் கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிச்சாவரம் சென்று அங்கு கடலோடு ஒட்டி வளர்ந்திருக்கும் மாங்க்ரோவ்  செடிகளைக் காண படகுகளில் பகல் நேரத்தில் அழைத்துச் செல்வதினை பார்த்திருக்கின்றோம். நமது ஊர்களில் புல்களில் செடிகளில் இரவு நேரங்களில் மின்னும்  மின்மினு பூச்சிகளை எடுத்து கைலிகளில், கைத்துண்டுகளில் வைத்து வெளிச்சம் வருவதினைப் பார்த்திருக்கின்றோம். அதுபோன்று செலாங்கோர் கோலாப் பகுதியில் கடலில் தண்ணீர் அளவிற்கு வளர்ந்த செடிகளில் இருக்கும் மின்மினி பூச்சிகளைக் காண இரவு நேரங்களில் படகு மூலாம் அழைத்துச் செல்கிறார்கள். அந்த செடிகளில் உள்ள மின்மினி பூச்சிகள் இரவில் நீல நிற வானில் மின்னும் நட்ச்சத்திரமாக இருப்பது மிகவும் அழகு வாய்ந்தது. இதேபோன்று பிச்சாவரத்திலும் அமைந்தால் சுற்றுலா பயணிகள் இழுக்கும் மையமாக இருக்கும்.
3)      3) மலாசியாவின் கிரீடமாக அமைந்திருப்பது புத்ர ஜெயா என்ற அரசு அலுவலகம் ஆகும். புத்திர ஜெயா என்பது சான்ஸ்க்ரிட் மொழியில் அரசக் குழந்தை என்று அழைக்கப் படும். இது கோலாலம்பூர் நகரை விட்டு 25 கி.மீ. தெற்கில் அமைக்கப் பட்ட 2001 ஆம் ஆண்டு.அரசாங்க தலைமைப் பீடமாகும். இந்த நகருக்குச் செல்ல தனி 6-பாதை சாலை அமைக்கப் பட்டுள்ளது. இதனில் மன்னர், பிரதமர், மந்திரிகள்  தலைமையிடத்திலிருந்து கடைநிலை ஊழியர் வரை பணி புரியும் அலுவலகம் உள்ளது. அத்துடன் அங்குள்ள ஊழியருக்கு தனித் தனியே குடியிருப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதனை நீண்ட ஆண்டு பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர் முகமது காலத்தில் சிந்தித்து செயலாக்கப் பட்டுள்ளது. பசுமைக் கட்டிடத்திற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும். இரவு நேரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக இதன் அலங்கார விளக்கில் ஜொலிக்கும் கட்டிடங்களைக் காண ஆயிரக்கணக்கில் வருகின்றனர். இங்குள்ளது போன்று எந்த கெடுபிடியும் இல்லை. இந்தியாவில் பஞ்சாபினை விட்டு ஹரியானா பிரிந்தபோது ஒரு சண்டிகார் என்ற புது நகரம் உருவாக்கப் பட்டது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம். சென்னையிலும் அண்ணா சாலையில் போக்குவரத்து மிகுந்த இடத்தில் வெறும் அலுவலுக்கு மட்டும் ரூ.1400 கோடியில் கட்டப் பட்டது. ஆனால் அது இப்போது மருத்துவமனையாகி விட்டது. இதனையே வண்டலூர் அருகில் உள்ள அரசு நிலத்தில் தலைமைச் செயலகம் கட்டி, அங்கேயே தலைமைச் செயலக ஊழியர் தங்க வீடுகளும் கட்டிக் கொடுத்து இருக்கலாம். தற்போதுள்ள ஊழியர் வீடுகளான பட்டிணப்பாக்கம் இடிக்கப் பட்டும், லாயட்ஸ் ரோடு குடியிருப்பு இடியும் நிலையில் இருப்பதினை மனதில் கொண்டு அந்த நடவடிக்கை எடுத்து இருந்தால் தற்போதுள்ள கட்டிடத்தில் பிரச்சனையே வந்திருக்காது.
என்னுடைய பயணக்கட்டுரையில் ரசித்த சில சம்பவங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.   தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் பயனாக இருக்கும்.


No comments:

Post a Comment